Cricket Countdown....

Friday, November 26, 2010

Klueless - அறிவாளிகளுக்கான விளையாட்டு



Klueless - இது ஒரு ஆன்லைன் புதிர் போட்டி. கடந்த 5 வருடமாக IIM, Indore-ஆல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த புதிர் போட்டி எப்படி என்றால் இவர்கள் தரும் வலை முகவரியில் உள்ள க்ளூக்களை வைத்து அடுத்தடுத்த Level ஐ அடைய வேண்டும்.

க்ளூக்கள் வலைபக்கத்தின் தலைப்பிலோ, முகவரியிலோ, படத்திலோ, படத்தின் பெயரிலோ, Page Source -லோ இருக்கும்.... தேவையில்லாத க்ளுக்களை கொடுத்தும் குழப்பி இருப்பர், ஜாக்கிரதை.

விடைகள் ஒரு கிளிக் செய்யும்படியோ, வலை முகவரி மாற்றும்படியோ அல்லது விடை பட்டையில் எழுதும்படியோ இருக்கும்....

என்ன முட்டி மோதியும் சென்ற ஆண்டு என்னால் 25 level ஐ தான் தொட முடிந்தது. இந்த ஆண்டு 20 வரையே வந்துள்ளேன்....

முயற்சி செய்து பாருங்களேன்... நானும் உதவுகிறேன்... கூட்டணி வைத்தாவது இந்த முறை முடிக்க முயற்சிப்போம், வாருங்கள்...

விளையாட்டை தொடங்க இங்கு செல்லவும்...

விதிமுறைகள் இங்கு உள்ளது....

மூளையை தூசு தட்டுவோமா? ஸ்டார்ட் மியூசிக்....

டிஸ்கி 1 : விடைகளை வெளியிடாமலும், சுலபமாக க்ளுதருவதை தவிர்க்கவும் கமெண்டுக்கள் மட்டறுக்கப்படுகிறது

டிஸ்கி 2: என் அடுத்த 75வது இடுகையை வலைசரத்தில் அடுத்த வாரம்  முதல் எழுதுகிறேன்.... தாம்பூலம் வெச்சாச்சி, வந்துடுங்க மக்கா....



Monday, November 22, 2010

(பதிவு) உலக பொது மறை

பிறரைதொடர்பதிவுக்கு முற்பகல் கூப்பிடின் தமக்குதொடர்பதிவு
பிற்பகல் தானே வரும்

புனைவெழுதி திட்டு பிரபலமாவாரே ஆவர்
பதிவெழுதி பிரபலமாக தெரியாதவர்

மொக்கைபதிவு பிரபலம் ஆகிடுமே ஆகாதே
என்றும் நல்ல பதிவு

அனானியாய் கமெண்டுபவர ஒறுத்தல் அவர்நாண
திட்டி புதுபதிவு போட்டுவிடல்

ஓட்டு கமெண்டு கும்மி Follow இந்நான்கும்
பிரபல பதிவர்க்கு அழகு

கும்மி அடித்து 100 க்மெண்ட் வாங்கியபின்
சொல்க நான் “பிரபலபதிவர்”

குழப்ப பதிவு கிலர்க்கு எளிய அரியவாம்
படித்து புரிந்து கொளல்

புதுபதிவு போட சரக்கு இல்லாத் போது
சிலசமயம் மெயிலும் பதிவாகும்

மாத்தியோசித்து பதிவு போடுக அஃதிலார்
பதிவு போடாமை நன்று

கதைபெரிது கவிதைபெரிது என்னும் மக்கள் மொக்கை
எவ்வளவு கஷ்டமென தெரியாதவர்

டிஸ்கி: எந்த எந்த குறள் யார்யாருக்கு பொருந்தும் என்பதை ரசிகர்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்


Thursday, November 18, 2010

தமிழ்படங்களை கண்டுபிடியுங்கள் - 3

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழ்படங்களை கண்டிபிடியுங்கள், இதோ உங்களுக்காக... (அய்யோ... வேணாம்... யாரும் எதிர்பார்கலைனு யாராவது சீன் போட்டீங்க, சாரி, கமெண்ட் போட்டீங்க... பிச்சி புடுவேன் பிச்சி)

சென்றமுறை ரொம்பவே கடினமாக இருந்துச்சுனு சொன்னதால் இந்த முறை எல்லாம் சுமார் ரகம். யோசிங்க... யோசிங்க... யோசிங்க....

விதிமுறைகள் சிம்பிள். தந்துள்ள படத்தை வைத்து தமிழ் படங்களின் பெயர்களை கண்டு பிடிக்க வேண்டும். படத்தை பார்த்து ஏமாந்துவிடாதீர்கள், படத்தை வைத்து அனைத்து ஆங்கிளிலும் யோசித்து பாருங்கள். விடையை கண்டு பிடித்துவிடலாம். 


உதாரணம்:

விடை : இதய கோவில் (அ) இதயம் ஒரு கோவில்

விடைகளை பின்னூட்டத்தில் அளிக்கவும்.



1.


2.



3.


4.


5.


6.


7.


8.


9.


10.


விடைகள் விரைவில்.... அதுவரை கமெண்டுக்கள் Moderation செய்யப்படும்

டிஸ்கி: 10வது படத்தை டிசைன் செய்து தந்து உதவிய நண்பர் எஸ் கே விற்கு நன்றி.


Monday, November 15, 2010

பஸ்ல கிடைச்ச வரம்

ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னு ரொம்ப காலமா கடவுளை வேண்டி தவம் இருந்தானாம்.

ஒரு நாள் கடவுள் நேர்ல வந்தாராம் “பக்தா என்ன வரம் வேண்டும் கேள்” அப்படின்னு கேட்டாராம்..

குப்புசாமியும் ரொம்ப ஆர்வமா “கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது”ன்னு கேட்டானாம்..

“சரி பக்தா அப்படியே ஆகட்டும்”னு சொல்லிட்டு கடவுள் மறைஞ்சு போய்ட்டாராம்.

குப்புசாமி ரொம்ப சந்தோசமாகிட்டு வீட்டுக்கு போய்ட்டு இருந்தானாம். வழியில யாரோ ஒருத்தர் குப்புசாமியை கவனிச்சுக்கிட்டே வந்து “உங்க பேரு என்ன?ன்னு கேட்டாராம்..

அதுக்கு குப்புசாமி அவனோட பேரை சொல்லமுடியாம
“குப்புமி”
“குப்புமி”
“குப்புமி”ன்னு சொன்னானாம் பாவம்

கடைசிவரை அவனுக்கு ”சாவே” வரலையாம்...

டிஸ்கி: இந்த கதை படிச்சுட்டு கதறிகதறி அழுதா நான் பொறுப்பில்லை. ஏன்னா இது எனக்கு பஸ்ல (Buzz) வந்துச்சு. அனைத்து உரிமைகளும் (அடிவாங்குவது உட்பட) இதை எழுதிய அந்த புண்ணியவானையே சேரும்.


அடுத்த முறை கார்ல வந்த கதைய சொல்லுறேன்.... 

Friday, November 12, 2010

சகியின் சங்கதிகள்

அந்தோ!!

அவள் எனக்கு 
பதில் கடிதம் எழுதாமல் 
இருந்திருந்தால் நான் இறந்திருப்பேன்.
எழுதியதால் இறந்தது தமிழ்!
பொறியை கொண்டு எலியை
ஆளுமை செய்ததது போய்,
எலியை கொண்டு (கணிப்)பொறியை
ஆளுமை செய்கிறோம். 

எல்லாக்கம்பிகளும் 
வீணையின் அங்கமாவதில்லை. 

தினமும் செதுக்கும் ஒரே சிற்பம். 

நிழலைக்காண 
நிஜங்கள் ஏங்கி நிற்கின்றன. 

உடுக்க நல்ல கச்சையின்றி தவிக்கும் 
பிச்சைக்காரர்களைக் காணவோ நான் 
இச்சையுடன் அமர்ந்தேன் ஜன்னலோரத்திலே! 

ஒன்றாகவே இருந்த மூவரில் 
ஏனோ இன்று கடையவன் 
மூத்தவனை அழிக்கத்துவங்கினான்.  


தாய் வீடு 
பிறந்து வளர்ந்த வீட்டிற்கே
விருந்தாளியாய் சென்றாள்.
உரிமையிழந்தவளாய்! 


சகுனம் 
வீட்டில் இருந்து புறப்பட்டேன்.
குறுக்கே செல்லவிருந்த பூனை 
நின்றுவிட்டது.
இடையுறாத பயணத்தை நினைந்து
மகிழ்ந்தேன்.
ஆனால்... பூனை ஏன் நின்றது?
சகுனம் பார்த்திருக்குமோ? 

பரிசு 
ஒவ்வொரு தந்தையும் 
தன் மகனுக்கு தரும் 
முதல் பரிசு - 
முத்தம் 

தாய் 
நான் சாப்பிட்டேன்
நீ சாப்பிடு...

என்று ஊட்டிய தாய்
பாசத்தைக் கற்பித்தாள்

பொய்யையும்தான் 
  
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*
இந்த கவிதைலாம் சத்தியமா என்னுடையது இல்லைங்க.... (நான் தான் எழுதினேன்னு சொன்னா மட்டும் நம்பவா போறீங்க!) 

இவை எல்லாம் சகோதரி சங்கீதா ஜெயபிரகாஷ் தன் புதிய வலைப்பூ 


எழுதியவை. சும்மா சொல்ல கூடாது நல்லாவே எழுதி இருக்காங்க. ஒரு எட்டு போய் பார்த்து உற்சாகபடுத்துங்க நண்பர்களே!


Wednesday, November 10, 2010

பூமியை பாதுகாப்போம்....

உங்களிடம் நல்ல முறையில் ஓடும் பழைய வாட்ச்கள் உள்ளதா?

படித்து முடித்த பல புத்தகங்கள் தூக்கிபோட மனமின்றி பரணை நிரப்புகிறதா?

பழைய மிக்ஸி, எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பழுதாகி ஆனால் ரிப்பேர் செய்யும் வழி இருந்து செய்யாமல் விட்டது வீட்டில் சேர்ந்து இருக்கிறதா?


இப்படி பல உபயோகித்த பொருட்கள், தூக்கி எறிய மனது வராத பொருட்கள், பிறருக்கு உதவும் என நீங்கள் நினைக்கும் பொருட்கள் போன்றவற்றை தேவைபடுபவர்களுக்கு கொண்டு சேர்க்க ஒரு தளம் உள்ளது.

http://www.freecycle.org/

இது முழுதும் வியாபார நோக்கிலாமல் செயல்படும் ஒரு அமைப்பு. இவர்கள் நோக்கம் பூமியில் தேவையில்லாமல் தேங்கும் உபயோகமுள்ள பொருட்களை மறுசுழற்சியாக மற்றவர்கள் உபயோகிக்க உதவுவதுதான். 

ஏறக்குறைய உலகம் முழுதும் 7 மில்லியன் மக்கள் இந்த அமைப்பில் இணைந்து உள்ளனர். இவர்கள் செயல்படும் விதம் ரொம்ப சிம்பிள். ஒவ்வொரு நாட்டுக்கும் பெருநகரங்கள் வாரியாக பிரிவுகள் வைத்து இருக்கின்றனர். ஒவ்வொரு பிரிவுக்கு ஒரு குரூப் மெயில் வைத்து உள்ளனர். இதில் அவர்கள் தாங்கள் கொடுக்க விரும்பும் அல்லது பெற விரும்பும் பொருளின் Detailsஐ தங்கள் முகவரிஅனுப்புவர். தேவைபடுவோர்  அவர்களை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளலாம்.


இந்த அமைப்பு தமிழ்நாட்டில் சென்னையிலும் கோவையிலும் உள்ளது.  கோவையில் அவ்வளவு ஆக்டிவ்வாக இல்லை என்றாலும், சென்னையில் 450+ உறுப்பினர்களுடன் இயங்கி வருகிறது. இதில் உறுப்பினர் ஆவதால் அவர்கள் தரும் பொருளை நீங்கள் வாங்கிதான் ஆக வேண்டும் என்றோ, இல்லை, நீங்க குறிப்பிட்டவருக்கு தான் பொருள் தர வேண்டும் என்றோ அவசியம் இல்லை. இது முற்றிலும் உங்கள் சுய விருப்பத்தை பொருத்ததே....

இதில் உறுப்பினராக ஆகித்தான் பார்ப்போமே... யாருக்கு தெரியும் நீங்கள் வெகு நாட்களாக தேடி கொண்டு இருக்கும் ஒரு புத்தகமோ, பொருளோ உங்களுக்கு இலவசமாகவே கிடைக்கலாம்...

வீணாக்குவதை தவிர்ப்போம்....
பூமியை பாதுகாப்போம்...


Thursday, November 4, 2010

தீபாவளி ஸ்பெஷல் கிப்ட்....

குழந்தைகளுக்கு எந்த பண்டிகை பிடிக்கும் என கேட்டு பாருங்கள்.... கண்டிப்பாய் அவர்கள் தீபாவளி என்றுதான் சொல்வார்கள். ஏனென்றால், எனக்கும் அந்த பண்டிகைதான் பிடிக்கும். ஹி ஹி ஹி...

சரி தீபாவளி கிப்ட் கொடுப்பதற்கு முன் ஒரு சின்ன கொசுவத்தி சுத்தலாமா? சிறுவயதில் தீபாவளி சமயங்களில் என் பாட்டி வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்து இருந்தேன். அவர் வேலூர் அருகில் உள்ள ஆரணியில் வசிக்கிறார். ஒவ்வொரு வருடமும் மே மாத விடுமுறைக்கும் அங்குதான் செல்வதால் எனக்கு என ஒரு நண்பர் பட்டாளம் இருந்தது.

தீபாவளி சமயங்களில் எங்கள் தெருவில் ஒரு வழக்கம் உண்டு. சிறுவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீபாவளி அன்று விடியற்காலை நரகாசுரன் வதம் நிகழ்ச்சியை செய்வோம். இது பல காலமாக அங்கு நடந்து வரும் வழக்கம். அந்த வருடமும் அந்த நிகழ்ச்சியை செய்தோம். அந்த தெருவில் ஒரு ஓவியர் இருந்தார். அவர் ஒரு ஆளுயர அட்டையில்  கட்அவுட் வடிவத்தில் கிருஷ்ணர், நரகாசுரன் படங்களை வரைந்து தந்தார். நரகாசுரன் தலை தனியாக கழலும்படி அமைத்து இருந்தார்.


நாங்கள் எல்லாம் முந்தின நாள்  இரவு அவர் அவர்கள் வசதிக்கு தக்கபடி ஆளுக்கு கொஞ்சம் பட்டாசு எடுத்து வந்து ஒரு வீட்டில் கிருஷ்ணர் நரகாசுரன் படங்களுடன் சேர்த்து வைத்தோம். மறுநாள் காலை  மணி அடித்து கொண்டும் பட்டாசு வெடித்துக் கொண்டும் கிருஷ்ணர் படத்தை ஊர்வலமாக மூன்று தெரு சுற்றி வந்து எங்கள் தெருவின் மையத்தில் கிருஷ்ணரையும் நரகாசுரனையும் எதிர் எதிரில் சுமார் 5 மீட்டர் இடைவெளியில் வைத்தோம்.

நரகாசுரன் தலையில் இருந்து ஒரு நூல் கட்டி அதன் மறுமுனையை கிருஷ்ணர் கையில் கட்டினோம். அந்த நூலில், ரயில் வெடியை வைத்தோம். அது கொளுத்தியவுடன் வேகமாக சென்று நரகாசுரன் தலை இடித்து துண்டிக்குமாறு செட் செய்தோம்.

எல்லாம் திட்டமிட்ட படிதான் சென்றது. ஆனால், இந்த பாழாய் போன ரயில் வெடி சொதப்பிவிட்டது. சரியாக நூலில் சென்ற ரயில் வெடி நரகாசுரன் அருகில் சென்றவுடன் என்ன ஆனாததோ தெரியவில்லை உடனே வேகமாக ரிட்டன் ஆனாது. (பிறகுதான் சொன்னார்கள் அந்த வெடி அப்படித்தான் இரண்டு பக்கமும் சென்று வருமாம்) நேராக கிருஷ்ணர் கையை பதம்பார்த்து விரலை துண்டித்தது. சுதர்சணசக்கரத்துடன் கிருஷ்ணர் விரல் சில அடிகள் தள்ளி விழுந்தது. விடு சண்டைனா எதிரிமேல 10 அடி விழும்போது நம்ம மேல 1 அடி விழறது சகஜம்தான்னு கிருஷ்ணரை சமாதானம் செய்து விட்டு அடுத்த பிளான் B ஐ ஆரம்பித்தோம், அடுத்த அடி எங்கள் மீது விழப்போவது தெரியாமல்.

எங்கள் பிளான் B என்ன வென்றால், நரகாசுரன் தலையில் ராக்கெட்டை கட்டி பற்ற வைப்பது. அது தலையுடன் மேல சென்ற பிறகு மீதி நரகாசுரனை கொளுத்திவிடுவது. அந்த பிளான் சரி என தோணவே, அனைத்தையும் செட் செய்தோம். கிருஷ்ணர் தானே வதம் செய்ய வேண்டும்! எனவே, எங்களில் கிருஷ்ணா என பெயர் கொண்டவனை கூப்பிட்டோம் (என்ன ஒரு சிந்தனை, அப்போவே நான் இப்படிதான் ரொம்ப அறிவு) அவனை கன்வின்ஸ் செய்து கொளுத்த சொன்னோம்.

அடுத்த விபரீதம் நடந்தது. கொளுத்தியவுடன் நரகாசுரன் தலை ராக்கெட் பாரம் தாங்காமல் சரிய, ராக்கெட் மட்டும் தலையில் இருந்து பிடுங்கி கொண்டு நேராக அருகில் இருந்த குடிசை ஓலையில் தஞ்சம் அடைந்து வெடித்தது.  சிறியதாக தீப்பற்றவும் ஆரம்பித்தது. நாங்கள் போட்ட கூச்சலில் வீட்டில்  இருந்த அனைத்து பெரியவர்களும் ஒரு வழியாக ஓடிவந்து தீயை அனைத்தனர். 

அடுத்து இன்னொரு நண்பன் பிளான் C செய்யலாம்டா என சொல்ல, நாங்கள் அனைவரும் ஆணியே புடுங்க வேணாம் என்று சொல்லி நரகாசுரன் தலையை நாங்களே தூக்கி போட்டு விட்டு கிளம்பினோம். வீட்டுக்கு போன பின் எங்களுக்கு டமால் டிமீல் சரவெடியுடன் நிஜ தீபாவளி ஆரம்பித்தது....

டிஸ்கி: தயவுசெய்து, குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் உடன் இருங்கள். டீவி நிகழ்ச்சிகளை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். 

அனைவருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

ஓ! தீபாவளி கிப்ட் தரலைல. இந்த ஆடியோ கிளிப்பை கேளுங்கள்.




என் ஒன்றரை வயது மகள் ஷம்ஹித்தா உங்களுக்கு “Happy Deepavali” சொல்கிறாள்

ஆடியோ கிளிப் ஒர்க் ஆகவில்லை எனில் இங்கு கிளிக் செய்து கேட்கவும்.

Monday, November 1, 2010

எனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்

இன்றுடன் எந்திரன் திரைக்கு வந்து சரியாக ஒரு மாதம் முடிந்துவிட்டது. ரஜினியின் மாஸ்சாலும் சன் டீவியின் அதித விளம்பரத்தாலும் இந்த படத்தை 90% பேர் பார்த்துவிட்டனர். சில ஆகா ஓகோ விமர்சனங்களும், பல எதிர் மறை விமர்சனங்கள் வந்து ஓய்ந்தது.
ஆனால், இந்த படம் ஒரு டிபிக்கல் ரஜினி ரசிகனுக்கு திருப்தி அளித்ததா? மற்ற ரஜினி படங்களின் வரிசையில் இந்த படம் எந்த இடத்தில் உள்ளது என தெரிந்துகொள்ள விருப்பப்பட்டேன்.

இதோ என் பார்வையில் ரஜினி யின் டாப் 10 திரைப்படங்கள்.


10. அருணாசலம்
சாதாரணமாக தொடங்கும் இந்த படம், 30 நாளில் 30 கோடி செலவழிக்க வேண்டும் என்றவுடன் பரபரப்பாக மாறும். என்னை போன்ற ரசிகர்களின் கனவான அரசியல்வாதி ரஜினியைகாட்டிய ஒரே படம்

9. எந்திரன்
மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, கடைசியில் சுட்டி டிவி பார்ப்பதை போல இருந்தது என விமர்சிக்கப்பட்ட படம். சராசரி ரஜினி ரசிகனை திருப்திபடுத்த தவறிய படம். எவ்வளவு பிரம்மாண்டம் இருந்தாலும் ரஜினியை பார்க்க முடியாத ரஜினி படம்

8. சந்திரமுகி
பாபா பட படுதோல்விக்கு பிறகு வந்து ரஜினி இமேஜை தூக்கி நிறுத்தியபடம். ரசிகனின் எதிர்பார்ப்பை எல்லா வகையிலும் நிறைவேற்றி ஒரு வருடம் ஓடிய சாதனை திரைப்படம்

7. அண்ணாமலை
“மல டா, அண்ணாமலைடா”  ஒரே பாடலில் பணக்காரன் ஆகும் டிரெண்டை தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய படம். காமெடி, ஸ்டைல், பஞ்ச் டயலாக் என கலக்கி இருப்பார்

6. முள்ளும் மலரும்
தன்னாலும் குணசித்திர பாத்திரங்களில் நடிக்க முடியும் என ரஜினி நிரூபித்தபடம். மகேந்திரன், இளையராஜா, ரஜினி கூட்டணியில் கலக்கியபடம். ரஜினி படங்களில் ஒரு மகுடம் இது.



5. சிவாஜி
ஷங்கர் டைரக்‌ஷனில் ரஜினி - ரசிகர்களை அதிரவைத்த படம். வயதான ரஜினியை இளைஞராக காட்டிய படம். பஞ்ச் டயலாக், சண்டைகாட்சிகள், வெள்ளைதோல் ரஜினி என படம் முழுக்க பரபர விறுவிறுப்பு படம்.



4. தில்லுமுல்லு
ரஜினியின் முழுநீள நகைச்சுவை திரைப்படம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம். தேங்காய் சீனிவாசனும் ரஜினியும் போட்டி போட்டு காமெடி செய்து இருப்பர்



3. படையப்பா
நடிகர்திலகத்துடன் ரஜினி நடித்த கடைசிபடம். ரம்யாகிருஷ்ணனா, ரஜினியா என கடைசிவரை போட்டியாகவே செல்லும் படம். “மின்சாரகண்ணா, இந்த வயசுலயும் உன் ஸ்டைலும், அழகும் இன்னும் உன்னைவிட்டு போகலை” என்ற நீலாம்பரி டயலாக்கை நிருபித்தபடி ரஜினியின் நடிப்பு இருக்கும்



2. தளபதி
நட்புக்கு இலக்கணம் கர்ணனை நினைவு படுத்தும் கதாபாத்திரம். இளையராஜாவின் இசை கூடுதல் பலம். பாசம், நட்பு, காதல், கோபம் என அனைத்தையும் வெளிப்படுத்தி ஜெயித்து இருப்பார் ரஜினி. ரஜினி ரசிகர்களின் ஆல் டைம் பெவரைட்டில் கண்டிப்பாய் இந்த படம் இருக்கும்



1. பாட்ஷா
பெரும்பாலான ரஜினி ரசிகர்களின் நெ 1 ரஜினி படம். ஸ்டைல், நடிப்பு, பஞ்ச் டயலாக், சண்டை என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருப்பார். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம்.


ஆக, என் பார்வையில் “எந்திரன்” 9வது இடத்தைதான் பெற்று உள்ளது. இதை ஒரு தொடர்பதிவாக மாற்றி மற்றவர் நிலையையும் பார்க்க விருப்பம்.

எனவே, நான் இந்த பதிவை தொடர அழைப்பது.,

1. சிரிப்பு போலிஸ் ரமெஷ்
2. அமீரக அரிமா தேவா
3. ரஜினி ரசிகர் நண்பர்  எல் கே

ரஜினி நடித்த 154 படங்களின் பெயர் பட்டியலும் இங்கு இருக்கிறது.