என் குழந்தை ஷம்ஹித்தாவின் குறும்புகளை சொல்லி ரொம்ப நாளாச்சு, இதோ உங்களுக்காக.....
குறும்பு 1:
இந்தியா சென்று வந்ததுல இருந்து இவளின் ஆட்டமும், சந்தோஷமும் அதிகமாகி இருக்கு... கூடவே குறும்புகளும். இப்பொழுது எல்லாம் பேனாவை வைத்து கொண்டு நிறையவே கிறுக்க ஆரம்பிச்சி இருக்கா. நாங்கள் வேற அதை கட்டாயம் வேடிக்கை பார்த்தே ஆகனுமாம்.
ஒருநாள் ஹாலில் விளையாடிட்டு இருந்தா, நான் ரொம்ப சீரியசாக நிதின் கோகலே எழுதிய “இலங்கையின் இறுதிப்போர்” புத்தகத்த படிச்சிட்டு இருந்தேன். சுற்றி சுற்றி விளையாடிட்டு இருந்தவ என் கிட்ட வந்து நின்னா. நான் புத்தகத்துல மும்முரமா இருந்தேன். என்னை பார்த்துட்டு பிறகு குனிந்து புத்தகத்தின் அட்டையை பார்த்தா. அதுல இருந்த ராஜபக்ஷே, பிரபாகரன், இலங்கை வரைபடங்களை தொட்டு ஏதோ சொல்லிட்டு, என்னை பார்த்து “அப்பா, Bookaa No” ன்னு சொல்லிட்டு அந்த புத்தகத்தை விடாப்பிடியாக என்னிடம் இருந்து பிடுங்கி அலமாரியில் வெச்சிட்டா. நான் அந்த புத்தகத்தை படிச்சா என்னங்க தப்பு? ஏனோ தெரியல, இன்னைக்கு வரை அந்த புத்தகத்தை நான் எடுக்கறதும் உடனே அவ வந்து அதை பிடுங்கி வைக்கறதும் தொடர்ந்துகிட்டே தான் இருக்குது. அப்போதான் அந்த புத்தகத்தை படிச்சி முடிப்பேனோ....
குறும்பு 2:
இவகிட்ட இருக்கற ஒரே கெட்ட பழக்கம் தூங்கும் போது விரல் சூப்புறது. தூங்கும் போது மட்டும் தான், மத்த நேரத்துல இல்லை. ஒருநாள் தூங்க படுத்துட்டு இருக்கும் போது விரல் சூப்பினா. நான் “பாப்பாக்கு 2 வயசு ஆக போகுது இல்லையா? விரல் சூப்பாமா தூங்கனும். பாரு அப்பா, விரல் சூப்பரனா இல்லைல, நீயும் விரல் சூப்பாம சமத்தா தூங்கனும்” என்றேன். உடனே என் பொண்ணு, “அப்பா, இந்தா” என தன் இன்னொரு கை விரலை எடுத்து என் வாயில் வைத்து சூப்ப சொல்கிறாள். என்னத்த பண்ண?
குறும்பு 3:
என் பொண்ணு குறும்பு செய்யும் போது “வாலு” என செல்லமா திட்டுவேன். ஒருநாள் ஏதோ குறும்பு செய்ததற்காக, அவளை பார்த்து “வால் பொண்ணு நீ” என்றேன். அதற்கு அவள் “வாலு NO" என்றாள். உடனே நான் “நீ தான் வாலு, பாரு பின்னாடி வால் முளைச்சி இருக்கு”ன்னு சொல்ல. உடனே, வேகமாக என் பின்னாடி வந்து நின்னு, என் முதுகை பார்த்து “அச்சசோ, வால் காணோம்” ன்னு சொல்றா? என் பொண்ணுக்கும் தெரிஞ்சி போச்சோ!