மதிய உணவு இடைவேளையில் 8 பெண்கள் சேர்ந்தால் அங்கு வெட்டி பேச்சுக்களும், கிண்டல்களும் தான் இருக்கும். அன்றும் அந்த அலுவலகத்தில் அப்படித்தான் இருந்தது. அவர்கள் பேச்சு Times of India நடத்திய TEACH INDIA வை பற்றி திரும்ப, ஒவ்வொருவரும் தங்கள் சிரமங்களையும், அதில் பங்கேற்க முடியாத வருத்தங்களையும் தெரிவித்தனர்.
அப்பொழுது தான் ஒரு சிறு தீப்பொறி உருவானது. “ஏன், நாம் ஒரு குழுவாக இயலாதவர்களுக்கு உதவ கூடாது?”. இந்த சிறுதீப்பொறியை அணையாமல் பெரியதாக்கும் முயற்சியில் விரைவாக செயலில் இறங்கினர்.முதலில் AID INDIA (
இது TEACH INDIA விற்கு உதவும் ஒரு NGO அமைப்பு ) விற்கு தங்கள் தொழில் சம்பந்தமான கல்வி பொருட்களையும், கற்பிக்கும் சாதனங்களையும் வழங்கினர். இவர்கள் வெளிநாட்டு வாழ் மாணவர்களுக்கு இந்தியாவில் இருந்து கொண்டே கணிதம் சொல்லித்தரும் பணியை செய்கின்றனர். அதனால், கணித்தை எவ்வாறு எளிமையாய் புரிய வைப்பது, எவ்வாறு படங்கள் கொண்டு விளக்குவது என்பது இவர்களுக்கு கைவந்த கலை. இந்த உதவியை தொடர்ந்து வழங்கி கொண்டு இருந்த போது ஒரு தேக்கம் வந்தது.
சரி, வேறு வழியில் உதவலாம் என இவர்கள் எண்ணங்கள் விரிய ஆரம்பித்தது. ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்ல அனாதை ஆசிரமம், முதியோர் இல்லம், ஏழை சிறுவர்களுக்கு படிக்க உதவி என பட்டியல் நீண்டது.
இதன் காரணமாக மேலும் சக ஆண் ஊழியர்கள் 3 பேர் உட்பட சிலர் சேர எண்ணிக்கை 15 ஐ தொட்டது
15 பேரை வைத்துக் கொண்டு என்ன சாதிக்க முடியும் என்ற இவர்களின் கேள்விக்கு எதையும் சாதிக்கலாம் என இவர்கள் அலுவலகம் மூலம் பதில் வந்தது. உருவாக்கினர் ஒரு குழுவை, “பரிவர்தன்” என பெயரும் வைத்தனர். எவ்வளவு பொருத்தமான் பெயர் “பரிவர்தன்” ( परिवर्तन ) என்றால் “மாற்றம்” என்ற பொருள்.
எல்லாம் சரி, துவக்கம் ஓஹோ என இருக்க வேண்டாமா? அடித்தனர் முதல் பந்திலேயே சிக்சர். “THE BANYAN" அமைப்பை தொடர்பு கொண்டனர். இந்த அமைப்பு சென்னையில் மனநலம் குன்றியவர்களை பாதுகாத்துவருகிறது. BANYAN மூலம் மனநலம் குன்றியவர்கள் உருவாக்கிய வாழ்த்து அட்டைகள், கலை பொருட்கள் போன்றவற்றை ஒரு கண்காட்சியாக தங்கள் அலுவலகம் இருக்கும் 4 அடுக்கு மாடி கட்டிட வரவேற்பறையில் வைத்தனர்
ஆச்சர்யபடும் விதமாக, அனைத்து பொருட்களும் பகல் 2 மணிக்குள்ளேயே விற்று தீர்ந்தது. இவர்கள் முயற்சிக்கு அந்த கட்டிடத்தில் இருந்த அனைத்து அலுவலகங்களும் ஆதரவுதந்து வெற்றிக்கு உதவினர். அடுத்து அடுத்து இவர்கள் பல அனாதை விடுதிகளுக்கு உணவு வழங்குதல், படிக்க உதவி வேண்டுவோருக்கு உதவி செய்தல் என பல செயல்களை செய்து வருகின்றனர்.
வருடம்தோறும் அலுவலகம் சார்பாக கொண்டாடும் சில நிகழ்ச்சிகளை தவிர்த்து அந்த பணத்தில் பிறருக்கு உதவுகின்றனர். இது என்ன பெரிய விஷயம் என்று நினைக்கிறீர்களா? எல்லோரும் செய்வது தானே என சிந்திக்கிறீர்களா?
இது சிறு தீப்பொறிக்கு கிடைத்த வெற்றி!
10 பெண்களின் முயற்சியில் விளைந்த மாற்றம்!!
வாய் சொல்லில் வீரர்கள் இருக்கும் நாட்டில்,
செயலில் இறங்கி சத்தம் இல்லாமல்
சாதித்து கொண்டு இருக்கும் இவர்கள்,
நம்மை எதுவும் கேட்கவும் இல்லை!
நம் உதவியை எதிர்பார்க்கவும் இல்லை!!
இந்த உதவிகளை இவர்கள் தங்கள் மனத்திருப்திக்காக மட்டுமே செய்துவருகிறார்கள்.
இவர்களின் இத்தகைய முயற்சிக்கு தேவை சில பாராட்டுகளும், சில உற்சாக வார்த்தைகளும்தான். அதை தருவோமே அவர்களுக்கு!
பிறருக்கு உதவ நாம் அன்னை தெரேசாவாகவோ, மகாத்மாகாந்தியாகவோ இருக்க தேவையில்லை, மனம் இருந்தால் போதும் என உணர்த்தியுள்ள இந்த மகளிர் அமைப்புக்கு நான் அளிப்பது
ஒரு ராயல் சல்யூட்...
நீங்கள்?